ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , ராமநாதபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு நடைபெற்றது.
கூட்ட ஆய்வில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணியினை துவக்கி வைத்து பள்ளி வாகனங்களின் உட்கட்டமைப்பு வசதி , செயல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2026-2027 கல்வி ஆண்டில் இயக்கும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சிறப்பு விதி 2012ன்படி கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 தனியார் பள்ளிகளில் 408 பள்ளி பேருந்துகள் பள்ளி மாணாக்கர்களை பள்ளிக்கு அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளி வாகன சிறப்பு விதி 2012ன்படி வருடத்திற்கொரு முறை வருவாய்த்துறை, காவல் துறை, பள்ளி கல்வித் துறை , போக்குவரத்து துறை ஆகியோர் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து பள்ளி வாகனங்களை சீரிய முறையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா என பரிசோதிக்கப்பட்டது.
பள்ளி வாகன கூட்டாய்வில் வாகனத்தினுடைய உறுதி, வாகனத்தினுடைய டயர்கள், வாகனத்தினுடைய உட்புற தரை தளம், வாகனத்தினுடைய இருக்கைகள், வாகனத்தினுடைய அவசர கால கதவு வாகனத்தினுடைய படிக்கட்டுகள், வாகனத்தினுடைய பிரேக் திறன், அவசர கால பயன்பாட்டிற்கான தீயனைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டியில் மருந்துகள் , வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா நல்ல நிலையில் இயங்குகிறதா என்று சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் குறைபாடுள்ள பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு சீர்செய்த பின்பு தான் இயக்கபட அனுமதி வழங்கப்படும்.
மேலும் , பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறையின்றி முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனங்களை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் , பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து, சீரிய முறையில் இயக்கி விபத்தில்லாத ஆண்டாக அமைந்திட ஒவ்வொரு ஓட்டுநரும் உறுதிமொழி ஏற்று அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது , பொறுப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் , முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , மோட்டர் வாகன ஆய்வாளர் தங்கராஜ் , மாவட்ட தீயனைப்பு அலுவலர் ஏழுமலை , வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலசுந்தரம் , சரத்குமார், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
