கடலூர் மாவட்டம், நெய்வேலி தனியார் அனல் மின் நிலையத்தில், தொழிலாளர் மீது எரி சாம்பல் விழுந்து உயிரிழந்த விவகாரம். இரவு முதல் அனல் மின் நிலைய வாயில் முன்பு கிராம மக்கள் உறவினர்கள் உள்ளிட்டோர் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம்.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு உயர் இழப்பீடும் நிரந்தர வேலை வாய்ப்பு தரும் வரை நகர மாட்டோம் என புவனகிரி எம்எல்ஏ இரவில் இருந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல்,


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஊத்தங்கல் பகுதியில் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியை பெற்று டாக்கா என்ற தனியார் அனல் மின் நிலையம் மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பாய்லரில் இருந்து எரி சாம்பல் விழுந்து ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்த மணிவாசகம் (37) என்பவர் துடி துடித்து உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலையும், உயர் இழப்பீடும் வழங்க வேண்டும் என நேற்று மாலை முதல் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர்.


இது குறித்து, தகவல் அறிந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக தனியார் அனல் மின் நிலையம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்த நிலையில், தற்போதும் தனியார் அனல் மின் நிலைய வாயில் முன்பு பந்தல் அமைத்து புவனகிரி எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் கிராம மக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், கடலூர் மாவட்டத்தில் இருந்து காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் செய்தியாளர் : எதிரொலி / 8939476777
