தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு இலவச சேலை நெசவு செய்யும் கூட்டுறவு சங்க புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை இழப்புக்கு நிவாரணம், இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்கத்தில் சேலை நெசவு செய்ய வந்த நூலை வாங்கவில்லை. கடந்த வாரம் கைத்தறித்துறை உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கஞ்சி தொட்டி திறந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 5- வது நாளாக கஞ்சி தொட்டி போராட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டுறவு சங்க அலுவலகத்தை திறந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நெசவாளர்கள் கூலி நிர்ணயம் செய்யாமல் எப்படி அலுவலகத்தை திறக்கலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மற்றும் கைத்தறி துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து நெசவாளர்கள் கலைந்து சென்றனர்.

கூட்டுறவு சங்க ஊழியர் மாடசாமியை தாக்கியதாக அளித்த புகாரில் சிஐடியு கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராமர், நெசவாளர் ஆறுமுகம் ஆகியோர் மீது தளவாய்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு காரணம் அமைச்சர் ஜெகதீஸ்வரி அனுப்பியதாக கூறிக்கொண்டு சிலர் வந்து அமைதியாக நடந்த போராட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் எங்கள் பிரச்சனை தீரும் வரை இன்னும் கடுமையாக போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர். போராட்ட குழுவினர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் தனித்தனியே ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 893947627
