காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 124-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை ஜூலை 4 சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வின் தொடக்கத்தில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்பூர் கர்னல் பேராசிரியர் க. ரவி, சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மு. வாசிமலைராஜா வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றிய துணைவேந்தர் மதிப்பூர் கர்னல் பேராசிரியர் க. ரவி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, இளைஞர்களுக்கான அவரது உயரிய சிந்தனைகள், தன்னம்பிக்கை, ஒழுக்கம், நாட்டுப்பற்று மற்றும் மனிதநேய மதிப்புகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அ. செந்தில்ராஜன் உரையாற்றி, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளையும் வாழ்வியல் நெறிகளையும் இன்றைய இளைஞர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் மு. ஜோதி பாசு, சுவாமி விவேகானந்தரின் தமிழக வருகை மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் சமூகப் பணி துறை தலைவர் (பொ) பேராசிரியர் மா. வேலுச்சாமி, வரலாற்றுத் துறை தலைவர் (பொ) கா. பரந்தாமன், பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி பேராசிரியர் கு. ரமேஷ்குமார், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கோ. விநாயகமூர்த்தி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் வாழ்நாள் கற்றல் துறையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி, சுவாமி விவேகானந்தரின் உயரிய சிந்தனைகளையும், இளைஞர்களுக்கான அவருடைய ஊக்கமூட்டும் வாழ்வியல் தத்துவங்களையும் நினைவுகூரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed