ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென் கழுங்கு மராமத்து பணி , களரி கால்வாய் , களரி கண்மாய் மராமத்து பணிகள் , பல்வேறு துறைகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் தென் கழுங்கு மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீரை வெளியேற்றும் சக்கரகோட்டை வரத்து கால்வாய் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் , ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் களரி கால்வாய் , களரி கண்மாய் மராமத்து பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் வைகை ஆற்றிலிருந்து 36 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கடமடை கால்வாய்கள் வரை தண்ணீர் செல்லக்கூடிய பாதைகளையும் ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் கால்வாய்கள் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. ஆகவே மழைக்காலம் வருவதற்கு முன்பு மராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென செயற்பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மல்லல் ஊராட்சி, மாலங்குடி கிராமத்தில் வேளாண் வணிகத்துறையின் மூலமாக ரூ.38.5 இலட்சம் மதிப்பீட்டில் விளைப் பொருள்களை தரம் பிரிப்பு கூடம் இணைந்த உலர் தளம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களை தரம் பிரித்து உலர்த்துவதற்கும் , சேமிப்பதற்கும் இந்த தளம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடியும் தருவாயில் உள்ள இப்பணிகளை நடப்பு பருவ காலத்திற்குள் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பின்னர் , புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், திருப்புல்லாணி


ஊராட்சி ஒன்றியம், மேலசீத்தை கிராமத்தில் நாடக மேடை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது , பரமக்குடி கீழ்வைகை வடிநில கோட்டம் செயற்பொறியாளர் நீள்முடியோன் , உதவி பொறியாளர்கள் ஆனந்த் பாபுஜி , திரு.முகமது யாசர் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
